Saturday, May 1, 2010

நிகழ்வுகள் -2 இயற்கை விவசாய பயிற்சி





































நிகழ்வுகள்-1 சிவபுர ஆதீனம் ஆச்சார அபிஷேகம்






















சிவஞான போதம்

அவன் அவள் அதுஎனும் அவைமூ வினைமையில்
தோற்றிய திதியே ஒடுங்கிமலத் துள தாம்
அந்தம் ஆதி என்மனார் புலவர்.
பொழிப்புரை
சூத்திரம் என்னுதலிற்றோவெனின் சங்காரகாரணனாயுள்ள முதலையே முதலாகவுடைத்து இவ்வுலகம் என்பதுணர்த்துதல் நுதலிற்று. (வார்த்திகம் 1)
இது சூத்திரக் கருத்துரைக்கின்றது. இள் நிவிர்த்திகலை முதலிய பஞ்ச கலைகளுட்பட்ட ஐவகைச் சங்காரத்துள் இறுதிக் கண்ணதாகிய மாசங்காரத்தைச் செய்யும் வினைமுதலாயுள்ள முதல்வனையே தனக்கு முதற்கடவுளாக வுடைத்து அவனவளது என்று இவ்வாறு சுட்டி யுணரப்படுவதாய உலகம் என வேதாக மங்களுட் கூறப்படுவதனை அநுமான அளவையா லுணர்த்துதலைக் கருதிற்று இச்சூத்திரம் என்றவாறு.
குறிப்புரை :
ஈண்டு ஆசிரியர், முதனூலிற் கூறியவாறே சிவாகமங்களி னோதப்படும் ஞானபாதப்பொரு ளெல்லாவற்றையும் பொது, உண்மையென்று இரண்டாகத் தொகுத்து, பிரமாணவியல் இலக்கணவியல் சாதனவியல் பயனியலென நால்வகைப்படுத்து, பிரமாணவியல் மூன்று பாதத்தாற் கூறுவான்தொடங்கி, முதற்கண் உலகிற்கு முதற்கடவுள் சிறப்புவகையான் உண்டென்னும் ஆகமப் பிரமாணத்தை வலியுறுத்துவதாய அநுமானப் பிரமாணங் கூறுகின்றார்.
ஏகாரம், இயைபின்மை நீக்குதற்கும் பிறிதினியைபு நீக்குதற்கும் பொதுவாய்நின்ற பிரிநிலை.
இதன்பொழிப்பு உரைத்துக்கொள்க. (வா 2)*
இஃது இவ்வுரைமுகத்துக் கேட்போரால் உரைவகைபற்றிச் செய்து கோடற்பாலதொன்றனை அறிவுறுத்துகின்றது. இதன் பொருள் இச்சூத்திரத்தின் பிண்டப்பொழிப்பு முன்னர்க் கண்ணழித்துரைக்கும் பொழிப்புரைபற்றி உரைத்துக்கொள்க. என்றவாறு.
எனவே, இங்ஙனம் இருவகைப்படும் பொழிப்புரையுட் கண்ணழித்துக் கடாவிடைகளானுரைக்கும் வார்த்திகமாய பொழிப்புரை மாத்திரையே யாமீண்டுரைக்கின்றாம்; பிண்டமாகக் கொண்டுரைப்பதாய பொழிப்புரை இதுபற்றி யுணர்ந்துகோடல் எளிதாகலின், அஃதியாமுரைக்கின்றிலம் என உரைமுகத்து மாணாக்கர்க்கு அறிவுறுத்தவாறாயிற்று. இஃது, ஏனைச் சூத்திரங்களினும் உய்த்துக் கொண்டுணர்தற்பொருட்டு, முதற்கண் வைக்கப்பட்டது.
இவ்வாறு ஆசிரியர் ஆணைதந்தமையின், கண்ணழித் துரைபற்றிச் சூத்திரத்திற்குப் பதப்பொருள் கூறுதும். அவன் அவள் அது எனும் அவை புலவர் என்பது. அவனென்றும் அவளென்றும் அதுவென்றும் இவ்வாறு பகுத்துப் பலவாய்ச் சுட்டியுணரப்படுஞ் சொல்லும் பொருளுமாய இருகூற்றுப் பிரபஞ்சத்தொகுதி; தோற்றம் நிலை இறுதியென்னும் முத்தொழிலுடைமையால், ஒருவனாற் றோற்றப்பட்டதாய உள்பொருளேயாம். அது, தோன்றுங்கால், தானொடுங்குதற்கு ஏதுவாய் நின்ற கடவுளினின்றும், சகசமல நீங்காமையால், அது நீங்குதற்பொருட்டு மீளத்தோன்றுவதாம். இவ்வாறாகலின், சங்காரத்தொழிலைச் செய்யுங் கடவுளே உலகிற்கு முதற்கடவுள்; ஏனையோர் அன்னரல்லர் எனக் கூறுவர் அளவை நூலுணர்ந்தோர் என்றவாறு.
அவை தொகுதி ; சுட்டுப் பெயரெனக் கொள்ளின், உளவெனப் பிரித்துப், பயனிலையாக்கித், தாமென்பதனை அசை நிலையாக வைத்துரைத்து, ஆக்கச்சொல் வருவித்துக்கொள்க. வினைமை வினையுடைமை. தோன்றியவென்னாது தோற்றியவெனப் பிறவினை வாய்பாட்டானோதுதலின், அதற்குரிய வினைமுதல் அவாய் நிலையான் வந்தது. தோற்றியவென்னும் பெயரெச்சந் திதியென்னுஞ் செயப்படு பொருட்பெயர் கொண்டது. திதியா யொருவனால் தோற்றப்பட்டதென்பார் தோற்றிய திதியென்றார். திதியென்றது ஈண்டு உள்பொருளென்னுந் துணையாய் நின்றது. மூவினையுடைமையால் உள்பொருளாதலும், அவ்விரண்டு முடைமையால் நிமித்த காரணனை யுடைத்தாதலுந் துணியப்படுமென்பார், மூவினைமையிற் றோற்றிய திதியென்றார். ஏகாரந் தேற்றம். ஒடுங்கியென்பது பெயர். உருபுகள் தொக்கு நின்றன. அந்தத்தைச் செய்யுங் கடவுளை அந்தமென்றது உபசாரம். காணப்பட்டவுலகாற் காணப்படாத கடவுட்குண்மை கூறவேண்டுதலின், தோற்றிய திதியே யெனவும், ஒடுங்கியுள தாமெனவும், உலகின்மேல் வைத்துக் கூறினார். கருத்துரையுட் கூறியதும் அது நோக்கி.
இச்சூத்திரத்துள் அவனவளதுவெனு மவை மூவினைமையின் என்பது ஓரதிகரணம்; தோற்றிய திதியே யொடுங்கியுளதாம் என்பது மூன்றதிகரணத்தை யுள்ளடக்கி நிற்பதோ ரதிகரணம்; அந்தமாதி யென்மனார் புலவர் என்பது ஓரதிகரணம்; ஆக முக்கூற்றது இச்சூத்திரமென்றுணர்க. இம்மூன்றும் முறையே ஒன்றற்கொன்றேதுவும் பயனுமாய் ஒரு பொருள்மேல் வருதலின், ஒரு சூத்திரத்தாற் கூறினார். தன்னாற் கூறப்படும் பொருளும், அதன்கண் ஐயப்பாடும், அதற்குப் பிறர் கூறும் பக்கமும், அதனை மறுத்துரைக்குஞ் சித்தாந்தத் துணிபும், இயைபுமென்னும் இவற்றது நிலைக்களம் ஈண்டு அதிகரணமெனப்படும்.

உள்ளம்கவர் கள்வன்



தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்
ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.



தோடணிந்த திருச்செவியை உடைய உமையம்மையை இடப்பாகத்தே உடையவனாய், விடை மீது ஏறி, ஒப்பற்ற தூய வெண்மையான பிறையை முடிமிசைச்சூடி, சுடுகாட்டில் விளைந்த சாம்பற் பொடியை உடல் முழுதும் பூசி வந்து என் உள்ளத்தைக் கவர்ந்தகள்வன், இதழ்களை உடைய தாமரை மலரில் விளங்கும் நான்முகன், படைத்தல் தொழில் வேண்டி முன்னை நாளில் வழிபட அவனுக்கு அருள்புரிந்த பெருமை மிக்க பிரமபுரத்தில் எழுந்தருளியுள்ள பெருமானாகிய இவன் அல்லனோ!